திருமலை மாவட்டம் மூதூர் கங்குவேலி வனப்பகுதியில் புராதன காலம்தொட்டு அமைந்திருந்த அகத்தியர் தாபனம் சிங்களப் படைகளால் எச்சங்கள் எதுவுமின்றி துடைத்தழிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் நாள் சனிக்கிழமை அகத்தியர் தாபனம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று திரும்பிய கங்குவேலி பிரதேசவாசிகளால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கங்குவேலியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் மேற்கேயுள்ள வனப்பகுதியில், மகாவலி கங்கைக்கு அருகில் அமைந்திருந்த அகத்தியர் தாபனத்திற்கு ஆடி அமாவாசைக் காலத்தில் சைவ மக்கள் சென்று வருவது வழமை.
இவர்களை விட இங்கு சேனைப் பயிர்ச்செய்கையாளர்களும், விறகுத் தொழிலாளர்களும் அடிக்கடி சென்று வருவதுண்டு.
இங்கு அமைந்திருந்த கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், ஈழத்தை முதன் முதலாக சோழர்கள் ஆட்சிசெய்வதற்கு முன்னரே (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) நிறுவப்பட்டமைக்கான வரலாற்று சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேயிடத்தில் 18ஆம் நூற்றாண்டில் 2ஆவது அகத்தியர் தமிழ் பல்கலைக் கழகம் இயங்கியமைக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்பட்டன.
இவ்வாறான புராதன சிறப்பையும், புராண காலப் பதிவுகளையும் கொண்ட அகத்தியர் தாபனத்தை கடந்த ஓரிரு நாட்களுக்கு சிங்களப் படைகள் துடைத்தழித்துள்ளன.
திருக்கரசுப் புராணத்தின் படி, கைலையில் சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும் திருமணம் இடம்பெற்ற பொழுது, கைலைமலை சரிந்ததாகவும், இதனை சீர்செய்யும் நிமித்தம் ஈழத்தின் திருமலைக்கு அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் – பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இவ்வாறான பிரசித்தி பெற்ற அகத்தியர் தாபனத்தை, நீலாப்பொல எனப்படும் சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களக் குடியேற்றவாசிகளின் துணையுடனேயே சிங்களப் படைகள் துழைத்திழித்திருப்பதாக கங்குவேலி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: உலக தமிழ் இணையம் (http://www.worldtamilweb.com/?p=516)
No comments:
Post a Comment