agatiyar

agatiyar
agatiyar

Thursday, July 21, 2011

அகத்தியர் வரலாறு

அகத்தியர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை

வழங்கிய முனிவர் என்றும்

அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்.


வரலாறு

  • சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
  • தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.
  • புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

அகத்தியரின் சிறப்புகள்

அகத்தியர்

அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.

  • தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
  • அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை(ஆற்றல்களைப்) பெற்றார்.
  • அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
  • கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
  • தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
  • இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
  • சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
  • இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
  • அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
  • வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.


சித்த வைத்தியம்

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.


அகத்தியர் எழுதிய நூல்கள்

அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

  1. அகத்தியர் வெண்பா
  2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
  3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
  4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
  5. அகத்தியர் வைத்தியம் 1500
  6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
  7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
  8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
  9. அகத்தியர் வைத்தியம் 4600
  10. அகத்தியர் செந்தூரம் 300
  11. அகத்தியர் மணி 4000
  12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
  13. அகத்தியர் பஸ்மம் 200
  14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
  15. அகத்தியர் பக்ஷணி
  16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
  17. சிவசாலம்
  18. சக்தி சாலம்
  19. சண்முக சாலம்
  20. ஆறெழுத்தந்தாதி
  21. காம வியாபகம்
  22. விதி நூண் மூவகை காண்டம்
  23. அகத்தியர் பூசாவிதி
  24. அகத்தியர் சூத்திரம் 30

போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்

  1. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
  2. அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.


பதினாறு போற்றிகள்

  1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
  2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
  3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
  4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
  5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
  6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
  7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
  8. இசைஞான ஜோதியே போற்றி!
  9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
  10. காவேரி தந்த கருணையே போற்றி!
  11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
  12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
  13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
  14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
  15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
  16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்

பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.


அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

  1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
  2. கல்வித்தடை நீங்கும்.
  3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
  4. முன்வினை பாவங்கள் அகலும்.
  5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
  6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
  7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
  8. சகலவிதமான நோய்களும் தீரும்.
  9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

4 comments:

  1. அருமையான பதிவு ஆனால் சில்லா எழுத்துகள் தெளிவு இல்லை.கவனிக்கவும்

    ReplyDelete
  2. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

    ReplyDelete